உண்ணாவிரதம் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு! 'இந்தியா முழுவதும் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும்'' என்று ஏற்கெனவே வலியுறுத்தி வரும் கேரள முதல்வர் அச்சுதானந்தன், சமீபத்தில் அதிரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார... எண்டோசல்ஃபானுக்கு எதிரானப் போராட்டம்... அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. எலியும், பூனையுமாக இருந்த பாரதிய ஜனதா உட்பட அரசியல் கட்சிகளும், நடிகர்களும்கூட அக்கறையோடு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
''காசர்கோடு மாவட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டது போதாதா? அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால்தான் தடை செய்வோம் என மத்திய அரசு சொல்வது முறையா? விவசாயத் துறை மந்திரி சரத் பவார் மக்களைப் பற்றி சிந்திக்காமல், எண்டோசல்ஃபான் கம்பெனிக்கு வக்காலத்து வாங்குகிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றவாளி எனத் தெரிந்திருந்தும், ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய அரசுதானே இது... வேறு எப்படி இருக்கும்?'' என்று உண்ணாவிரதத்தில் குரல் எழுப்பிய அச்சுதானந்தன்,
''எண்டோசல்ஃபானுக்கு, தடைவிதிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்போகிறேன்' என்றும் தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.
அச்சுதானந்தன் உண்ணாவிரதமிருந்த அதேநாளில், கேரள சர்வக் கட்சித் தலைவர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இந்திய அளவில் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது அதில், 'எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இது பற்றிய அறிக்கை கேட்டிருக்கிறோம். இந்த அறிக்கை கிடைத்ததும், இறுதி முடிவு அறிவிக்கப்படும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உண்ணாவிரதம் மாநிலம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளத் தொலைக்காட்சிகளில் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், பாதிப்பு காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஓரணியில் திரட்டியப் பெருமை எண்டோசல்ஃபானுக்கு கிடைத்துள்ளது.
எண்டோசல்ஃபானும்... காசர்கோடும்! கேரள மாநிலத்தின், காசர்கோடு பகுதியில் மாநில அரசுக்கு சொந்தமான 4,700 ஏக்கர் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்ஃபான் தெளிக்கப்பட, அந்தப் பகுதியே நோயாளிகளின் பூமியாகிவிட்டது. உடல் ஊனமுற்றவர்களாக, புற்றுநோயாளிகளாக, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களாக மொத்தத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள் மக்கள். அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, மக்கள் போராட ஆரம்பித்த பிறகு, விபரீதத்தை உணர்ந்த மாநில அரசு, உடனடியாக எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்தது . காசர்கோடு மாவட்டத்தை ஒட்டியுள்ள கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளிலும் எண்டோசல்ஃபானின் பாதிப்பு எதிரொலிக்க, கர்நாடக மாநிலமும் தடை விதித்துள்ளது.
கோடிகளில் நடக்கும் வியாபாரம்! உலக அளவில் எண்டோசல்ஃபான் தயாரிப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பூச்சிக்கொல்லி தயாரிப்புத் தொழிலில் 3,800 முதல் 4,100 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் இத்துறையில் கால் பதித்திருந்தாலும், 'எக்செல் இன்டஸ்ட்டிரீஸ்', 'ஹிந்துஸ்தான் இன்செக்டிசைஸ்', ஈ.ஜ.டி. பாரி ஆகியவையே அதிகளவில் தயாரிக்கின்றன.
விதவிதமானப் பெயர்கள்! 'எண்டோசல்ஃபான்’, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி. பழுப்பு மற்றும் கிரீம் நிறங்களில் சிறியத் தூளாகவும், படிகமாகவும் டர்பன்டைன் வாசத்துடனும் இருக்கும். குளோரின் ஏற்றப்பட்ட ஹைட்ரோ-கார்பன்தான் எண்டோசல்ஃபான் என அழைக்கப்படுகிறது. இதில் குளோரின் ஏற்றம் செய்யக் காரணியாக பயன்படுவது... தயோனில் குளோரைடு. இது, கந்தகத்தை பகுதிப் பொருளாகக் கொண்டுள்ளதால் நச்சுத் தன்மையுடையதாக இருக்கிறது.
எண்டோசைட் (Endosite), தியோடன் (Thiodan), ஹில்டன் (Hildan), எண்டோசெல் (Endocel),, எண்டாசிட் (Entacid), எண்டோசிட் (Endocid), ஹைசல்பான் (Hysulphan),, பாரிசல்ஃபான் (parrysulfan) ஆகிய பெயர்களில் எண்டோசல்ஃபான் சந்தைப்படுத்தப்படுகிறது.இது, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கும் பூச்சிக்கொல்லி வகையைச் சேர்ந்ததாகும்.
தானியங்கள், காபி, பருத்தி, பழப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், காய்கறிகள் மற்றும் உணவுப் பயிர்களில் நோய் உண்டாக்கும் பூச்சிகளை அழிக்கவும், மரத் துண்டுகளைப் பூச்சிகள் அரித்திடாமல் பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
உச்சநீதி மன்றம் கேள்வி! மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு 'எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், 'எண்டோசல்ஃபானைத் தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் ஏன் தடை விதிக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கெஞ்சிய இந்தியா... மிஞ்சிய உலக நாடுகள்! 'உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயற்கை (ரசாயன) மாசு ஒழிப்பு' பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள ரசாயனப் பாதிப்புகளைப் பற்றி விவாதிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மாநாடு ஏப்ரல் 25 முதல் 29 தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் இருந்து, பார்வையாளராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் அதைப்பற்றி நம்மிடம் பேசும்போது, ''மக்கள் நலனில் அக்கறையுள்ள பல நாடுகள் ஏற்கெனவே எண்டோசல்ஃபானைத் தடைசெய்து விட்டன. தற்போது நடைபெற்ற மாநாட்டில்கூட ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள், தங்கள் பகுதிகளில் தடை விதிக்கத் தயார் என அறிவித்தன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 'நாங்கள் ஏற்கெனவே தடை விதித்துவிட்டோம். என்றாலும், காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த மருந்தின் வீரியம், அது பயன்படுத்தப்படாத நாடுகளிலும்கூட பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உலகம் முழுவதும் தடை செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்' என வலியுறுத்தினர்.
பெரும்பாலான நாடுகளின் கருத்தும் இதுதான். இதை முன்கூட்டியே கணித்துவிட்ட இந்திய அரசின் பிரதிநிதிகள், 'ஓட்டெடுப்பு மூலமாக தடை ஏற்படுத்தி விடுவார்களோ' என அஞ்சி... ஆசிய மற்றும் பசிபிக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினர். 'எண்டோசல்ஃபான் உடனடியாக தடை செய்யப்பட்டால், பல விவசாயிகள் நஷ்டமடைவார்கள். இதனால் சமூக, பொருளாதாரத் தாக்கம் ஏற்படும். அதனால் தடைக் காலத்தை 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தள்ளிப்போடலாம்' என அதில் கெஞ்சிக் கூத்தாடியிருந்தனர். இதற்கெல்லாம் காரணம்... மக்கள் மீதான அபிமானமல்ல. பூச்சிக்கொல்லி தயாரிக்கும் கம்பெனிகள் மீதான அபிமானமே!
ஆனால், பெரும்பான்மையான நாடுகள் தடையை ஆதரிக்கவே, இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தடைக்கு எதிராக இதுவரை முழங்கி வந்த இந்தியப் பிரதிநிதிகள், வேறு வழியில்லாமல், 'ஐந்தாண்டுகள் வரையாவது அனுமதி தாருங்கள்’ எனக் கெஞ்ச ஆரம்பித்தனர். இதையடுத்து, இந்தியா, சீனா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுக்கு எண்டோசல்ஃபானைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது'' என்றார் ஜெயக்குமார்
|